கண் கருவிழி ஸ்கேன் செய்து ரேஷன் பொருள்கள் வழங்கும் முறை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
கிராம பகுதிகளில் கைரேகை விழுகாததால் ரேஷன் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுவதாகவும், அதற்கு தீர்வு காணவும் தமிழக சட்டப்பேரவையில் அவைத் தலைவர் அப்பாவு இன்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, பயோ மெட்ரிக்கில் கைரேகை விழுகாதவர்களின் சிரமத்தை போக்குவதற்காக விரைவில் கண் கருவிழி ஸ்கேன் செய்து பொருள்கள் வழங்குவதற்கான திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதல்வரின் அனுமதி பெற்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மற்றும் பெரம்பலூர் தொகுதிகளில் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
கண் கருவிழி சாதனங்களுக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு இந்த திட்டம் அமல்படுத்தப்படும். அதுவரை கைரேகை வேலை செய்யாதவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பொருள்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவைத் தலைவர் அப்பாவு, தற்போதைய நிலவரப்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவர்களிடம் கையெழுத்தி பெற்றால்தான் பொருள்கள் தரப்படுகிறது. இந்த நிலையை மாற்றி விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட ரேஷன் அலுவர்களிடம் கொடுத்தாலே பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சக்கரபாணி, அவைத் தலைவரின் கோரிக்கை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.