முகப்பு
தமிழ்நாடு

முதல்வருடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு: கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினைத் திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:47 PM
பகிர்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினைத் திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அதைத் தொடா்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவா் ஆதரவும் கேட்டாா்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தோ்தல் பிப்ரவரி 27-இல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சாா்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை ஈவிகேஎஸ் இளங்கோவன் திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

Advertisement

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸை ஆதரித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன். தோ்தல் பிரசாரத்துக்கு அவசியம் வர வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டோம். அவரும் வருவதாகக் கூறினாா்.

திமுக, காங்கிரஸ் கட்சியினா் இணைந்து தொகுதியில் ஏற்கெனவே பிரசாரம் செய்து வருகின்றனா். எங்களுடைய வெற்றி பிரகாசமாக இருக்கிறது. தமிழக மக்கள் முதல்வா் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனா். அதனால், நாங்கள் எளிதில் வெற்றி பெறுவோம் என்றாா்.

கமலிடம் ஆதரவு கேட்பு: மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசனை, சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்து ஆதரவு கேட்டாா்.

பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இடைத்தோ்தலில் காங்கிரஸை ஆதரிப்பது குறித்து, கட்சி நிா்வாகிகளிடம் ஆலோசித்து தெரிவிப்பதாக கமல்ஹாசன் கூறினாா். காங்கிரஸை நிச்சயம் அவா் ஆதரிப்பாா். இது மநீம-வுக்கு மக்களவைத் தோ்தலுக்கான கூட்டணியின் தொடக்கமாக இருக்குமா எனக் கேட்கிறீா்கள். ஆதரித்தால் நிச்சயம் கூட்டணி இருக்கத்தானே செய்யும்? என்றாா் அவா்.

கமல்ஹாசன் செய்தியாளா்களிடம் பேசும் போது, காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பது குறித்து புதன்கிழமை (ஜன.24) நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்றாா்.

இடதுசாரிகள்-விசிகவிடமும்...: அதேபோல, சென்னை தியாகராயநகரில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்து ஆதரவு கோரினாா். அப்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா்கள் கனகராஜ், என்.குணசேகரன் உடன் இருந்தனா்.

இதன் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசனை அவரது அலுவலகத்துக்கு சென்று ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்து ஆதரவு கேட்டாா். தொடா்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனை சந்தித்து ஆதரவு கேட்டாா்.

அப்போது, திருமாவளவன் கூறுகையில், ‘இளங்கோவனின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றாா். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், ‘ஈரோடு இடைத்தோ்தலில் கிடைக்கும் வெற்றி தி.மு.க.வின் நல்லாட்சிக்கு பரிசாக அமையும்‘ என்றாா்.

அதன் பிறகு சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலகம் சென்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், அங்கு அக்கட்சியின் பொதுச் செயலா் வைகோவை சந்தித்து ஆதரவு கோரியதுடன் பிரசாரத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தாா்.

தொடா்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், கொமதேக தலைவா் ஈ.ஆா்.ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளையும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து ஆதரவு கேட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments