முகப்பு
தமிழ்நாடு

ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்: முடிவுக்கு வருகிறதா மோதல்?

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

Updated On : 26 ஜனவரி, 2023 at 5:07 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:24 PM

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு அரசிற்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மோதல் நீடித்து வருகிறது. மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், அரசியலமைப்புக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் ஆளும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசின் உரையில் குறிப்பிட்ட பத்திகளை படிக்காமல் ஆளுநர் தவிர்த்ததையடுத்து அவருக்கு எதிராக தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இதனால் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மோதலுக்கு மத்தியில் குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு வந்தடைந்தார்.  அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார். 

ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவை புறக்கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கவை.

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதலுக்கு மத்தியில் முதல்வர் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.