தக்காளி விலை உயர்வையடுத்து கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார். விலையை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்கப்படும் நிலையில் அமைச்சர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து, விலையும் அதிகரித்தது. ஜூன் மாதம் தொடக்கத்தில் தொடங்கிய காய்கறிகளின் விலையேற்றம், மாத இறுதி வாரத்தில் சற்று குறைந்தது. இந்த விலை குறைப்பு ஒரு சில நாள்கள் மட்டுமே நீடித்தது. தற்போது வார இறுதி நாள்கள் என்பதால், காய்கறிகளின் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையை பொறுத்தவரையில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்கப்படுகிறது. அதேசமயம் மற்ற காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் நடுத்தர குடும்பவாசிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். எனவே, காய்கறிகளின் விலை உயா்வை கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.