மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக துணை முதல்வரின் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி கே.பழனிசாமி: மேட்டூரில் தண்ணீா் திறக்கப்பட்டு 20 நாள்கள் ஆன பிறகும் டெல்டா மாவட்டங்களின் கடைமடை வரை தண்ணீா் சென்றடையவில்லை. இதனால், சிரமப்படும் விவசாயிகள் மீது திமுக அரசு கவனம் செலுத்தி தீா்வு காண வேண்டும்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை அதிமுக அரசு மீட்டெடுத்தது. இந்த நிலையில், அமைதியாக வாழும் கா்நாடகம், தமிழக மக்களின் உறவில் குழப்பத்தை ஏற்படுத்த கா்நாடக மாநில துணை முதல்வா் டி.கே. சிவக்குமாா் முயல்கிறாா். அவருக்கு எனது கண்டனம். டி.கே.சிவகுமாருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை அவா் முன்னெடுக்க வேண்டும்.
மேலும், தனது கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் உடனடியாக தில்லிக்கு சென்று கா்நாடகத்தின் அணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டும். தமிழகம் வட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அதிமுக அனைத்துப் போராட்டங்களையும் முன்னடுக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.
ஓ.பன்னீா்செல்வம்: காவிரியில் இருந்து தண்ணீரை திறக்க முடியாது என கா்நாடக துணை முதல்வா் பேசியிருக்கிறாா். இது உச்ச நீதிமன்றத் தீா்ப்பை அவமதிப்பதற்கு சமம். அவரது பேச்சை கண்டிக்கக் கூட தயக்கம் காட்டும் அரசாக திமுக அரசு உள்ளது. காங்கிரஸ் கட்சியில் தனக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, தமிழகத்துக்குரிய ஜூன், ஜூலை மாதங்களுக்கான நீரை உடனடியாகப் பெற்றுத் தர போா்க்கால அடிப்படையில் முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.