இந்திரா நகர் ரயில்நிலையத்தில் பெண் பலி: இயங்காத சிசிடிவி; என்னதான் நடந்தது?
இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செல்போன் பறிக்க முயற்சித்தபோது அவர் கீழே விழுந்த பலியான சம்பவத்தில் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் செல்போன் பறிக்க முயற்சித்தபோது அவர் கீழே விழுந்த பலியான சம்பவத்தில் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை இந்திராநகர் ரயில் நிலையம் அருகே ரயிலில் பயணம் செய்த பிரீத்தி[23] என்ற பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற சம்பவத்தின்போது, ரயிலில் இருந்து தவறி விழுந்த ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி உயரிழந்தார்.
கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தவர் ப்ரித்தி[23]. தினமும் இவர் கோட்டூர்புரத்தில் இருந்து இந்திரா நகர் வரை பறக்கும் ரயிலில் பயணம் செய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 ம் தேதி கோட்டூர்புரத்தில் இருந்து திருவான்மியூருக்கு ரயிலில் சென்றார் ப்ரீத்தி. கோட்டூர்புரம் ரயில் நிலையத்தில் இருந்து, இந்திரா நகர் ரயில் நிலையத்தில் இறங்கும்போது அடையாளம் தெரியாத நபர்கள் செல்போன் பறிக்க முயன்றுள்ளார்கள். இதில் நிலைதடுமாறி ப்ரித்தி கீழே விழுந்துள்ளார். ப்ரீத்திக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ப்ரித்தி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
செல்போன் பறிக்க முயன்ற நபரிடமிருந்து தப்பிக்க ப்ரீத்தி முயன்றபோதுதான் நிலை தடுதாறி கீழே விழுந்தார் என்றும் தப்பியோடிய திருடர்களைப் பிடிக்க முடியாமல் வழக்கை முடிப்பதற்காக ரயில்வே காவல்துறையினர் விபத்து என வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த வழக்கில் உறவினர்கள் குற்றச்சாட்டின்பேரில் செல்போன் பறிக்க முயன்ற பட்டினம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்(27) மற்றும் அடையாறு பகுதியை சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த இரண்டு நபர்கள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மிக முக்கிய சாட்சியமாக இருந்திருக்க வேண்டியவை சிசிடிவி கேமராக்கள். ஆனால், இந்திரா நகர் ரயில் நிலையத்தில் ஓராண்டாக சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் இருப்பதாக, இந்த வழக்கு விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. இதனால்தான், குற்றவாளிகளை பிடிப்பதில் இத்தனை தாமதம் ஏற்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.