கோவை பேருந்து நிலையத்தில் நடனமாடிய யூடியூபருக்கு சம்மன்!
கோவை பேருந்து நிலையத்தில் யூடியூபரின் நடனம் பற்றி..
கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூடி இருந்த பகுதியில் சினிமா பாடலுக்கு நடனமாடி விடியோ பதிவிட்டு கேரள யூடியூபருக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர்.
கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்குக் கேரள மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் ஜித்து சாஜி என்பவர் ஒரு விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
அதில் ஒரு இளைஞர் சேலை அணிந்து பேருந்து நிலையத்திற்குள் நடனம் ஆடுவதும், இரண்டு இளைஞர்கள் பயணிகள் காத்திருப்பு பகுதி மற்றும் வாகன நிறுத்துமிடம் அருகில் நடனமாடும் காட்சியும் இடம்பெற்று இருந்தது. அந்த விடியோ வைரலானது மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையத்தில் எந்த அனுமதி இன்றி விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இதுபோன்ற செயல்களை காவல் துறையினர் தடுக்காமல் விட்டது, குறித்தும் விமர்சனம் கருத்துக்களைப் பலர் பதிவிட்டனர். அதோடு பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீது போலீஸார் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த விடியோவில் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் முகங்களை அவர்கள் அனுமதியின்றி காட்டி திருத்தம் செய்து பதிவேற்றி உள்ளனர். அதை நீக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து காட்டூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது,
பேருந்து நிலையத்தில் நடனமாடும் விடியோ கேரளாவைச் சேர்ந்த ஜி.எஸ் மோகன் என்ற இன்ஸ்டாகிராம் ஐ.டி யில் இடம்பெற்று உள்ளது. அவர்கள் தமிழ்நாடு, கேரளம் ஆகிய பொது இடங்களில் நடனமாடி பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தி உள்ளனர். எனவே அவர்களுக்குச் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்து உள்ளோம் என்றனர்.