முகப்பு
தமிழ்நாடு

இளம் பெண்கள் கருத்தரித்தல் அதிகரிப்பு: நாமக்கல் ஆட்சியர்  வேதனை!

நாமக்கல் மாவட்டத்தில் 19 வயதுக்கு உள்பட்ட இளம் பெண்கள் கருத்தரித்தல் அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் ச.உமா வேதனை தெரிவித்தார்.

Updated On : 11 ஜூலை, 2023 at 1:10 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 5:18 PM

நாமக்கல் மாவட்டத்தில் 19 வயதுக்கு உள்பட்ட இளம் பெண்கள் கருத்தரித்தல் அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் ச.உமா வேதனை தெரிவித்தார்.

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ச.உமா பங்கேற்று பேசியது: 

மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் வேலையில்லா திண்டாட்டம், உணவுப் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஆட்சியராக பொறுப்பேற்றேன். மாவட்டம் அனைத்து வளர்ச்சிகளையும் கொண்ட மாவட்டமாக இருக்கும் என நம்பினேன். ஆனால் மிகவும் வேதனைக்குரிய வகையில் 19 வயதிற்கு உள்பட்ட இளம் பெண்கள் ஓராண்டில் கருத்தரிப்பது அதிகப்படியாக இங்கு காணப்பட்டது. 

Advertisement

குறிப்பாக மொத்தம் 20,000 பேர் கருவுற்றதில், 19 வயதுக்குட்பட்டு 542 இளம் பெண்கள் திருமணம் முடிந்தும், திருமணமாகாமலும் கருவுற்றிருப்பது வேதனையாக உள்ளது. பெற்றோரை அழைத்து இது தொடர்பாக பேசியபோது, தற்போதைய காலம் மிகவும் மோசமாக உள்ள சூழலால் திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக தெரிவித்தனர். உலகம் கைபேசிக்குள் அடங்கி இருக்கிறது. அதன் மூலம் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. 

மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி பிறர் பாராட்டும் வண்ணம் வாழ்ந்திட வேண்டும். சாதனை படைத்த கல்பனா சாவ்லாவையும், இந்திரா காந்தியையும் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் தங்களையும் மற்றவர்கள் பேச வேண்டும் என்கிற சூழலை உருவாக்கிட வேண்டும் என்றார். முன்னதாக கல்லூரி மாணவிகள் பங்கேற்ற உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.