அதிமுக தலைமையில்தான் தமிழகத்தில் கூட்டணி: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
மத்தியில் ஆளும் தே.ஜ. கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை அவர் புதன்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 9 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. உலக அளவில் நமது நாட்டின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தியிருக்கிறார்.
2024 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நாடு முழுவதும் 330 இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறோம். சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல், அனைத்துக் கட்சிகளுக்கும் உரிய மரியாதை தேசிய ஜனநாயக கூட்டணியில் கொடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுகதான் அதிக உறுப்பினர்களைக் கொண்ட, பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. நாட்டில் தனித்தன்மை உள்ள கட்சிகள் அனைத்தும் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்துள்ளோம். அதிலும், அவரவர் கட்சி வளர வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளோம். எனவே, தமிழகத்தைப் பொருத்தவரையில், சட்டப்பேரவைத் தேர்தலானாலும், மக்களவைத் தேர்தலானாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும்.
தேர்தலில் கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தகுந்தவாறு அமையும். கொள்கை என்பது நிலையானது. தேர்தலில் வெற்றி பெறுவதே நோக்கம். அந்த வகையில், சூழ்நிலைக்கு தகுந்தவாறு கூட்டணி அமைப்பது இயல்பு. அதேபோல்தான் அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளது.
திமுகவுக்கு தகுதி கிடையாது: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணிக் கூட்டத்தில் இடம்பெற்ற தலைவர்கள் பலர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன.
சமீபத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடியை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.
இந்த நிலையில், ஊழலைப் பற்றியோ, அதிமுகவை பற்றியோ பேசுவதற்கு மு.க. ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் கிடையாது என்றார் அவர்.