பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை பெரியநாயகி அம்மன் உடனுறை வீரட்டானேஸ்வரர் கோயில் ஆடிப்பூர பிரம்மோத்ஸவத் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
நெய்வேலி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை பெரியநாயகி அம்மன் உடனுறை வீரட்டானேஸ்வரர் கோயில் ஆடிப்பூர பிரம்மோற்சவத் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் வைகாசி மற்றும் ஆடிப்பூர பிரம்மோற்சவம் விழா முக்கியத்துவம் பெற்றது. நிகழாண்டுக்கான ஆடிப்பூர பிரம்மோற்சவத் திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை மாடவீதியை வலம் வரும் திருத்தேர்.
விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மாலை பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாடவீதி உலா நடைபெற்று வந்தது. விழாவின் 9 ஆம் நாளான வியாழக்கிழமை காலை சுமார் 8.30 மணி அளவில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலை 5.30 மணி அளவில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. உற்சவர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேர் அருகே எழுந்தருளினார். அங்கு கோயில் குருக்கள் வேத மந்திரங்கள் கூறி பூஜைகள் நடத்தினர்.
இதையும் படிக்க |
பின்னர், பெரியநாயகி அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். இதையடுத்து, திரண்டிருந்த பெண்கள் தேரை வடம்பிடித்து மாடவீதி வழியாக இழுத்துச் சென்றனர். மீண்டும் தேர் நிலையை அடைந்தது.
தேர் திருவிழாவையொட்டி காவல், தீயணைப்பு மற்றும் மின் வாரியத்துறை ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் இடுபட்டிருந்தனர்.