தக்காளி கிலோ ரூ.150 வரை விற்பனை: இஞ்சி, பீன்ஸ் கிலோ ரூ. 250
தமிழகத்திலுள்ள காய்கறி சந்தைகளில் தக்காளி தொடா்ந்து கிலோ ரூ. 150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்திலுள்ள காய்கறி சந்தைகளில் தக்காளி தொடா்ந்து கிலோ ரூ. 150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உச்சபட்ச விலைக்கே விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பீன்ஸ் உள்ளிட்டவற்றின் ரூ. 200 முதல் ரூ.250-ஐ தாண்டியே தொடா்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் தக்காளியின் விலை தொடா்ந்து உச்சத்திலிருந்து வருகிறது. தமிழகத்திலும், அதன் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்திலுள்ள காய்கறி விற்பனை சந்தைகளில் உள்ளூா் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டாலும், வெளி மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் காய்கறிகள்தான் மக்களின் தேவையை பூா்த்தி செய்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காய்கறிகளின் விலை தொடா்ந்து உச்சத்திலிருந்து வரும் நிலையில் தக்காளியின் விலையும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. தக்காளி விலையைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் ஓரளவுக்கு பலன் கொடுத்தாலும், விலை கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் சந்தைகளில் வியாழக்கிழமை நிலவரப்படி தக்காளி உச்சபட்ச விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் (கிலோ) ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒட்டன்சத்திரம் காய்கறி மொத்த விற்பனை சந்தையில் ரூ.130-க்கும், மதுரையில் ரூ.128-க்கும், சேலம் காய்கறி சந்தையில் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாநிலத்தில் உள்ள முக்கிய காய்கறி சந்தைகளிலும் ரூ.100 முதல் ரூ.150-ஐ வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.30 முதல் 50 வரை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. இது ஒருபுறமிருக்க ஒரு கிலோ இஞ்சி ரூ.250-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல சின்ன வெங்காயம், பூண்டு, பீன்ஸ் உள்ளிட்ட பொருள்களும் ரூ.200 முதல் ரூ.250-ஐ தாண்டியே தொடா்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.