சேலம்: கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!
சேலம் அருகே உத்தம சோழபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: சேலம் அருகே உத்தம சோழபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த தறித்தொழிலாளி வெங்கடாசலம். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு பூங்கொடி என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் உத்தமசோழபுரம் அருகேவுள்ள புத்தூரில் இருக்கும் மாரியம்மாளின் தாயார் வீட்டுக்கு மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது உத்தமசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடாஜலம், அவரது மனைவி மாரியம்மாள், மகள் பூங்கொடி ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டனர். மூவரையும் 50 மீட்டர் தூரத்திற்கு கார் இழுத்துச் சென்றது.
இந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் மற்றும் அவரது மகள் பூங்கொடி இருவரும் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் வெங்கடாசலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.