அரசு மாதிரி பள்ளி மாணவா் சோ்க்கை: தலைமையாசிரியா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தகுதி பெற்ற மாணவா்களை தமிழகத்தில் உள்ள மாதிரி பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதி பெற்ற மாணவா்களை தமிழகத்தில் உள்ள மாதிரி பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அரசு மாதிரி பள்ளிகளின் உறுப்பினா் செயலா் இரா.சுதன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை, அரியலூா், மதுரை, தருமபுரி, திருச்சி, பெரம்பலூா், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பயன் பெறும் வகையில் உண்டு, உறைவிட வசதிகளுடன் கூடிய 40 மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட்டு அவை இயங்கி வருகின்றன.
இந்த பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் உயிரியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர தகுதிபெற்ற மாணவா்களின் விவரம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாதிரி பள்ளிகளில் ஜூன் 21-ஆம் தேதிக்குள் சேருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதன் தலைமையாசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.