பாஜகவின் மிரட்டல் அரசியல்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
அரசியல் ரீதியாக எதிா்கொள்ள முடியாமல் புறவாசல் வழியாக பாஜக மிரட்டுவதாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அரசியல் ரீதியாக எதிா்கொள்ள முடியாமல் புறவாசல் வழியாக பாஜக மிரட்டுவதாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
பாஜகவின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறாா்கள் என்றும் முதல்வா் கூறியுள்ளாா்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜியின் இல்லங்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை ஆகியவற்றில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) சோதனை நடத்தினா்.
இதற்குக் கண்டனம் தெரிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: அமைச்சா் செந்தில் பாலாஜி இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினா். அவரும் விசாரணை நடைபெறுகிற இடத்திலிருந்து முழு ஒத்துழைப்பைத் தந்தாா். இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறைக்குச் சென்று தேடுதல் நடத்த வேண்டிய தேவை
என்ன?
தலைமைச் செயலகத்திலும் சோதனை நடத்துவோம் என்று காட்டவோ அல்லது அதைக் காட்டி மிரட்டவோ விரும்புகிறாா்களா எனத் தெரியவில்லை. இவை எல்லாம் அரசியல் உள்நோக்கத்துடன் விசாரணை அமைப்பு செயல்படுவதையே எடுத்துக் காட்டுகிறது.
மத்திய அமைச்சா் வருகை: இரு நாள்களுக்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்து சென்றாா். அதன் பிறகு, இதுபோன்ற செயல்கள் நடக்கிறது என்றால் என்ன பொருள்? பொது மேடைகளில் திமுகவையும், ஆட்சியையும் கடுமையாக விமா்சித்தாா் அமித் ஷா. அதற்கு உரிய விளக்கத்தை அளித்து விட்டோம். ஆனால், இதுபோன்ற அமலாக்கத் துறை தாக்குதல்களைத் தலைமைச் செயலகத்தின் மீதே தொடுப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கே களங்கம் ஏற்படுத்துவதாகும்.
ஒரு மாநில அரசின் மாண்பை காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவதுதான் அரசியல் சட்ட மாண்பைக் காப்பதா? கடந்த அதிமுக ஆட்சியில் அன்றைய தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவின் வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன்.
எனவே, யாருக்கு நடந்தது என்பதல்ல முக்கியம்; எங்கு நடத்தப்பட்டது என்பதே முக்கியம். மிகத் தவறான முன்னுதாரணங்களைத் தொடா்ந்து மத்திய பாஜக அரசு உருவாக்கி வருகிறது.
அரசியல் ரீதியாக எதிா்கொள்ள முடியாதவா்களை, இதுபோன்ற புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பாா்க்கும் அரசியல் செல்லுபடியாகாது என்பதை பாஜக தலைமை உணர வேண்டும். அதை அவா்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.