முகப்பு
தமிழ்நாடு

கரூரில் செந்தில் பாலாஜியின் பெற்றோர், சகோதரர் வீடுகளிலும் சோதனை

கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும்  வீடு மற்றும் அவரது சகோதரர் வீடுகளிலும் அமலாக்க துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை  நடத்தி வருகிறார்கள்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

கரூர்: கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும்  வீடு மற்றும் அவரது சகோதரர் வீடுகளிலும் அமலாக்க துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை  நடத்தி வருகிறார்கள்.

கரூரில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜியின் பெற்றோர் வீடு மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் வீடுகளில் அமலாக்கத் துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரையடுத்து அவரது வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. 

இந்நிலையில் கடந்த மே மாதம் 26-ம் தேதி  முதல் ஜூன் 2-ம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். மேலும் அவரது ஆதரவாளர் வீடுகளில் இருந்து ஆவணங்கள் எடுத்துச் சென்றனர். மேலும் சில இடங்களில் அவரது ஆதரவாளர்களின் வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் சீல் வைத்தனர். 

இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் ராமேஸ்வரபட்டியில் உள்ள அவரது வீடு மற்றும் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் வெங்கமேட்டைச் சேர்ந்த சண்முகம் செட்டியார் என்பவரது வீடு என மூன்று  இடங்களில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 

ஏற்கனவே  வருமான  வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் தற்போது திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்வது கரூர் அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த முறை வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் உறவினர் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை செய்த போது வருமானவரித்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்பு இன்றி வந்ததால் திமுகவினருக்கும் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. 

இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் திமுகவினர் 18 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் திமுக தரப்பினர் அளித்த புகாரின் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ வீரர்கள் துணையுடன் வந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 

முழு கட்டுரையைப் படிக்க →