வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பற்றி எரிந்த கார்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சொகுசு கார் ஒன்று திடீரென பற்றி எரிந்தது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சொகுசு கார் ஒன்று திடீரென பற்றி எரிந்தது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆந்திர மாநிலம், அனந்த்பூர் பகுதியைச் சேர்ந்த தருண்குமார்(30). இவர் பெங்களூரிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக வேலூர் சிஎம்சி காலனியில் வீடு எடுத்து தங்கி, இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையொட்டி, தருண்குமார் வேலூருக்கு தனது சொந்த காரில் வந்திருந்தார்.
படிக்க: 2 நாள்களுக்கு வெயில் கொளுத்துமாம்: வானிலை ஆய்வு மையம்
Advertisement
இந்நிலையில், தருண்குமார் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை மதியம் காரில் வந்துள்ளார். அப்போது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக சாலையோரம் காரை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக காரில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது, காரில் தீப்பற்றி முழுமையாக எரியத் தொடங்கியது.
தகவலின்பேரில் வேலூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து காரில் பற்றியிருந்த தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.