முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு 3 நாள்களில் அறுவை சிகிச்சை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூன்று நாள்களில் பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Updated On : 16 ஜூன், 2023 at 11:35 AM
செந்தில் பாலாஜி(கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:38 AM

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூன்று நாள்களில் பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் இதயத்தின் ரத்த நாளங்களில் மூன்று அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், ஓமந்தூரார் மருத்துர்கள் பை-பாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரின் மனைவி கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றமும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து, நேற்று இரவே காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், எய்ம்ஸ் மருத்துவர்களும் செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்யலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.