செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடைகோரி வழக்கு: ஜூலை 7-க்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடைகோரிய வழக்கை ஜூலை 7-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சென்னை: செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடைகோரிய வழக்கை ஜூலை 7-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில்பாலாஜி வசம் இருந்த துறைகளை இரு அமைச்சா்களுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், செந்திலபாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பாா் எனவும் அறிவித்தது.
இந்நிலையில், செந்தில்பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சா் பதவியில் நீடிக்கிறாா் என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும், அமலாக்கத் துறை வழக்கை எதிா்கொண்டுள்ள செந்தில்பாலாஜி, அமைச்சராக நீடிப்பதை விரும்பவில்லை என ஆளுநா் தெரிவித்துள்ள சூழலில், அவா் பதவியில் நீடிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்றும் அதிமுகவின் முன்னாள் எம்.பி. ஜெயவா்த்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாள்கள் சிகிச்சை!
இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, செந்தில் பாலாஜி விவகாரத்தில் எந்த உத்தரவும் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது.
மேலும், முதல்வர் மற்றும் ஆளுநருக்கு இடையேயான கடித போக்குவரத்து குறித்து நீதிமன்றம் கேள்வி முடியாது எனத் தெரிவித்து வழக்கில் விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.