கோவில்பட்டி அருகே குச்சி ஆலையில் திடீர் தீ: மூதாட்டி பலி
கோவில்பட்டி அருகே குச்சி தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவில்பட்டி அருகே குச்சி தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தூத்துக்குடி மாவட்டம், பழைய அப்பனேரியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் சித்திரம் பட்டி கிராமம் அருகே தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களில் ஒன்றான குச்சி தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் சுமார் இரண்டு மணி அளவில் குச்சி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளி கோவில்பட்டி ஊரணி தெருவைச் சேர்ந்த மாரியம்மாள் (75) தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சித்திரம் பட்டியைச் சேர்ந்த கனகலட்சுமி காயமடைந்தார்.
காயமடைந்த கனக லட்சுமி உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். மேலும் மாரியம்மாள் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.