'உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் வழங்கியுள்ள தீர்ப்பு' - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட குழுவின் பரிந்துரையின்பேரில், தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் முறையில் சீர்திருத்தம் கோரி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், 'பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் ஆலோசனையின்படியே தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை வரவேற்கிறேன்.
துடிப்பான மக்களாட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடு இன்றியமையாதது. தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டு வரும் தற்போதைய சூழலில், சரியான நேரத்தில் தலையிட்டு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் மிகுந்த முக்கியத்துவம் உடையது' என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய புதிய விதி: உச்ச நீதிமன்றம்