தமிழகம் முழுவதும் 29 சுங்கச் சாவடிகளில் வருகின்ற மார்ச் 31 நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயரத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 55 சுங்கச் சாவடிகளில் 29 முக்கிய சுங்கச்சாவடிகளில் 5 முதல் 15 சதவிகிதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் சமர்பித்து விரைவில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்புதல் வாங்கவுள்ளது.
இதில், முக்கியமாக சென்னையில் இருந்து ஆந்திரம், கர்நாடகம், கோவை மற்றும் மதுரை செல்லக் கூடிய நெடுஞ்சாலைகளில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான சுங்கச் சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
சென்னையொட்டி அமைந்துள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற மாநில அரசு கோரிக்கை வைத்து வரும் நிலையில், அப்பகுதிகளில் அமைந்துள்ள வானகரம், சுரப்பட்டு உள்பட 5 சுங்கச் சாவடிகளின் கட்டணத்தையும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
அதேபோல், கடந்த நவம்பர் மாதம் சுங்கச் சாவடிகளின் கட்டணம் 40 சதவிகிதம் வரை குறைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்த வாக்குறுதி மீதான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், மீண்டும் சுங்கச் சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படும் பட்சத்தில் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணமும், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.