முகப்பு
தமிழ்நாடு

சாதி காரணமாக மின் இணைப்பு கிடைக்கவில்லை: ஆட்சியரிடம் மாணவிகள் புகார்

வாழப்பாடி அருகே உள்ள வடக்கு காடு ஏகே நகரில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:44 AM
பகிர்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வடக்கு காடு ஏகே நகரில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தனர்.

புகார் மனுவில் வடக்கு காடு ஏகே நகரில் புதிதாக இடம் வாங்கி அங்கு ஐந்து வருடத்திற்கு முன்பு புதிய வீடு ஒன்றை கட்டியதாகவும், அந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

மின் இணைப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்ட நிலையில், அவ்வப்போது மின் இணைப்பு கொடுக்க ஊழியர்கள் வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தினர் ஊழியர்களை மிரட்டி அனுப்பி விடுவதாகவும் இதனால் இரவு நேரத்தில் தாங்கள் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வயதான தாய் தந்தையரை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அருகில் உள்ள உயர் சாதியினர் தங்களை அங்கு வாழ விடாமல் செய்வதாகவும், இதனால் மின் இணைப்பு வழங்க முடியாத சூழ்நிலையில் ஊழியர்கள் உள்ளதாகவும், மின் ஊழியர்களை அதே பகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் குமார் மற்றும் அவரது உறவினர்கள் மிரட்டுவதால் இதுவரை மின் வசதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

உயர் படிப்பு முடித்து தற்போது போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் தங்களுக்கு மின் இணைப்பு இல்லாதது பெரும் குறையாக உள்ளதாகவும், இரவு 6 மணிக்கு மேல் பல்வேறு விஷ பூச்சிகள்  பிரச்சனை  மற்றும் இருட்டில் வயதான தாய் தந்தையரை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடனடியாக தங்கள் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சாதி காரணமாக 5 வருடமாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை எனக் கல்லூரி மாணவிகளின் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →