மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஹர ஹர சங்கர, சிவாய சங்கர விண்ணை முட்டும் பக்தி முழக்கங்களை எழுப்பி வழிபாடு செய்தனர்.
மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஹர ஹர சங்கர, சிவாய சங்கர விண்ணை முட்டும் பக்தி முழக்கங்களை எழுப்பி வழிபாடு செய்தனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்து தரிசனம் செய்தனர். சித்திரைத் திருவிழாவின் 11-வது நாளான இன்று மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது.
Advertisement
Advertisement
ஹர ஹர சங்கரா சிவாய சங்கரா எனப் பக்தி முழக்கங்களை எழுப்பியபடி பக்தர்கள் தேரை இழுத்தனர். அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரிய தேரில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராக காட்சி அளித்தார். சிறிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
திருக்கல்யாணத்தைக் காண முடியாத பக்தர்களுக்கு சுவாமியும், அம்மனும் மணக்கோலத்தில் எழுந்தருளினர். கீழமாசி வீதி, வடக்குமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி என நான்கு மாசி வீதிகளில் தேர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர். தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.