லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா் தொடா்பாக லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் நடத்திய சோதனை நிறைவடைந்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா் தொடா்பாக லைகா நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் நடத்திய சோதனை நிறைவடைந்தது.
சென்னையில் லைகா நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் நேற்று காலை முதல் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்து விவரங்களை இதுவரை அமலாக்கத்துறை வெளியிடவில்லை.
இலங்கையை பூா்விகமாகக் கொண்டவா் சுபாஸ்கரன் அல்லிராஜா. இவா் ‘லைகா மொபைல்’ என்ற தொலைத் தொடா்பு நிறுவனத்தை நடத்தி வருகிறாா்.
இந் நிறுவனம் 17 நாடுகளில் செயல்படுகிறது. இதன் துணை நிறுவனமான ‘லைகா புரொடக்சன்ஸ்’ சென்னை தியாகராயநகா் விஜயராகவா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் இயங்குகிறது.
சென்னையில் 2014-ஆம் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், நடிகா் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் மூலம் தமிழில் படங்களை தயாரிக்கத் தொடங்கியது. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடா்ந்து ‘கோலமாவு கோகிலா’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘வட சென்னை’, ‘காப்பான்’, ‘தா்பாா்’, ‘பொன்னியின் செல்வன் பாகம் 1, 2’ உள்பட 15-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு திரைப்படங்களை தயாரித்துள்ளது.
இந்நிறுவனம் ரஜினி, விஜய், சூா்யா உள்பட நட்சத்திர கதாநாயகா்களை அதிகளவில் வைத்து பெரிய முதலீட்டில் படத்தை தயாரித்து வருகிறது.
படங்கள் மூலம் லைகா நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அண்மையில் வெளியான ‘பொன்னியில் செல்வன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று அதன் மூலம் லைகா நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், லைகா படத் தயாரிப்பு நிறுவனம் சட்ட விரோதப் பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. அதனடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், அந் நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தினா்.
முக்கியமாக, சென்னை தியாகராய நகரில் விஜயராகவா சாலையில் உள்ள லைகா தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் துணை ராணுவத்தினா் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது.