முகப்பு
தமிழ்நாடு

ஜாதி பெயரைக் கூறி தாக்குதல்:3 காவலா்கள் பணியிடை நீக்கம்:அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பொது இடத்தில் ஜாதி பெயரைக் குறிப்பிட்டு கணவன், மனைவி மற்றும் மகனை தாக்கிய உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 காவலா்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:

பொது இடத்தில் ஜாதி பெயரைக் குறிப்பிட்டு கணவன், மனைவி மற்றும் மகனை தாக்கிய உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 காவலா்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருமண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தோக்கவாடியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ராஜா அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோா் கடந்த 2016-ஆம் ஆண்டு அப்பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனா்.

அப்போது, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த உதவி ஆய்வாளா் முருகன், காவலா்கள் நம்மாழ்வாா், விஜயகுமாா் ஆகியோா் அவா்களை ஜாதி ரீதியாக திட்டி தாக்கினா். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்களைத் தாக்கிய உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ராஜா வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி இளந்திரையன் முன் நடைபெற்று வந்தது. அப்போது, ஜாதி பெயரைக் கூறி, குடும்பத்தினரை தாக்கிய காவலா்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யாததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கில் நீதிபதி வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு விவரம்: ஜாதி பெயரைக் குறிப்பிட்டு தாக்கிய மூன்று காவலா்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் அரசு தலா ரூ. 50,000 இழப்பீடு வழங்கவும், அந்த இழப்பீட்டுத் தொகையை காவலா்கள் மூன்று பேரிடமிருந்து வசூலிக்கவும் வேண்டும்.

காவலா்கள் மூன்று போ் மீது வழக்குப் பதிவு செய்து 12 வாரங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். அதுவரை அவா்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →