தரங்கம்பாடி அருகே மின்னல் தாக்கி மீனவர் பலி
தரங்கம்பாடி அருகே மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார், காயமடைந்த மற்றொருவர் மீனவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார், காயமடைந்த மற்றொருவர் மீனவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த குப்புரத்தினம் மகன் கண்ணபிரான். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரது அண்ணன் அருண்(38) மற்றும் மணிவேல், கவிராஜ், சுப்பிரமணியன் ஆகியோருடன் வியாழக்கிழமை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மதியம் 3 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, திடீரென இடி மின்னலுடன் மழை பெய்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை மீன் பிடித்துக் கொண்டு துறைமுகத்திற்கு திரும்பியுள்ளனர். மற்ற நால்வரும் கரை ஏறிய நிலையில் படகில் இருந்த அருண் மின்னல் தாக்கியதில் உடல் கருகி உயிரிழந்தார்.
Advertisement
இதையும் படிக்க | ஹரியாணா: கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி!
மேலும், அருகில் இருந்த குட்டியாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராஜேந்திரன்(48) மின்னல் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசார் மற்றும் பொறையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மின்னல் தாக்கி உயிரிழந்த அருணுக்கு திருமணம் ஆகி ஜான்சி ராணி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.