தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை தப்பியோடிய சிறுவனைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குற்றச் சம்வங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படும் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களை அடைப்பதற்கான அரசு கூர்நோக்கு இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் இரு சிறுவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை காலைக்கடன்கள் மேற்கொள்வதற்காக இருவரும் கழிப்பறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்டவரும், வல்லம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட வருமான 17 வயது சிறுவன் சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டார்.
இது குறித்து இல்ல அலுவலர்கள் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் காவல் துறையினர் அச்சிறுவனைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க | பசுஞ்சாணத்தால் உருவாக்கப்பட்ட 3 லட்சம் தீப விளக்குகள்!
தமிழகத்தில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லங்களில் இருந்து சிறுவர்கள் அடிக்கடி தப்பிச் செல்வதற்கான காரணங்களைக் கண்டறிய தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் கே. சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தஞ்சாவூரில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அக்டோபர் 4-ஆம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது.