தூத்துக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை!
தூத்துக்குடி மையவாடி பகுதியில் வியாழக்கிழமை இளைஞர் ஒருவர்கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மையவாடி பகுதியில் வியாழக்கிழமை இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதே பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அதே இடத்தில் மேலும் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றன்றனர்.
தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா அருகே உள்ள மையவாடி பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக தென்பாகம் போலீசாருக்கு வியாழக்கிழமை மாலையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்யப்பட்ட நபர் யார் என்ற விவரம் தெரியவில்லை எனவும், தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதே பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் சப்பாணிமுத்து (42) கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த மில்லர்புரம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் மாரியப்பன் (43) கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி மர்ம நபர்களால் மையவாடி பகுதியில் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், தற்போது அதே பகுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உடலில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கும் ஏற்கெனவே நடைபெற்ற கொலைகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.