முகப்பு
தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணையில் பலத்த மழை: நீர் வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

Updated On : 23 நவம்பர் 2023, 11:05 am IST
பகிர்:

 
கம்பம்: முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

முல்லைப்பெரியாறு அணையில் புதன்கிழமை நிலவரப்படி, பெரியாறு அணையில் 16.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 13.6 மி.மீ., மழையும் பெய்தது. அதனால் அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு 1,283.75 கன அடியாக வந்தது.

வியாழக்கிழமை நிலவரப்படி, அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 30.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 384 மி.மீ., மழையும் பெய்தது. இதனால் அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு 4,117.64 கன அடியாக வந்தது. ஒரே நாளில் 2,834 கன அடி தண்ணீர் அதிகமாக வந்தது. தமிழக பகுதிக்கு அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

Advertisement

Advertisement

மின் உற்பத்தி
அணையிலிருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் மூன்று மின்னாக்கிகளில் தலா 30 மெகாவாட் என 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அணை நிலவரம்
முல்லைப்பெரியாறு அணையில் வியாழக்கிழமை நீர் மட்டம் 134.90 அடியாக இருந்தது, (மொத்த உயரம் 152 அடி), அணைக்குள் நீர் இருப்பு 5,842.70 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து வினாடிக்கு 4,117.64 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1000 கன அடியாகவும் இருந்தது. 

142 அடியாக உயர்த்த கோரிக்கை
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. அணையின் தமிழக நீர் பிடிப்புப் பகுதிகளான சிவகிரி சுந்தரமலை, சேத்தூர் சாஸ்தா கோயில் அணை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை 5 மணிக்கு தொடங்கிய மழை வியாழக்கிழமை அதிகாலை வரை பெய்துள்ளது. இதனால் பெரியாறு அணைக்கு 4 ஆயிரம் கன அடி நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. 

அணையின் நீர்மட்டத்தை 142 கன அடியாக உயர்த்த வேண்டும். ஆனால் பெரியாறு பாசன கோட்ட செயற்பொறியாளர் அன்புச்செல்வன் பெரியாறு அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டு நீர்மட்டம் உயரவிடாமல் தடுத்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறோம்.

இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 2014 -ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.