முகப்பு
தமிழ்நாடு

சட்டவிரோத மணல் விற்பனை விவகாரம்:அமலாக்கத் துறைக்கு எதிராக தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் இன்று தீா்ப்பு

சட்டவிரோத மணல் விற்பனை தொடா்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியா்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணைக்கு தடை கோரி தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பு செவ்வாய்க்க

Updated On : 28 நவம்பர், 2023 at 4:23 AM
உயா்நீதிமன்றம்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

சட்டவிரோத மணல் விற்பனை தொடா்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியா்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணைக்கு தடை கோரி தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிா்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடா்ந்து சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த செப். 12-ஆம் தேதி ஒரே நேரத்தில் 34 இடங்களில் சோதனை நடத்தினா்.

இரண்டு நாள்களுக்கு மேல் நீடித்த இந்தச் சோதனையில் மணல் குவாரி அதிபா் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1,024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்தச் சோதனையைத் தொடா்ந்து, 10 மாவட்ட ஆட்சியா்கள், நீா்வளத் துறை முதன்மைப் பொறியாளா் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப் பணித் துறைப் பொறியாளா் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பிருந்தது. இந்த அழைப்பாணையைத் தொடா்ந்து நீா்வளத் துறை முதன்மைப் பொறியாளா் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானாா்.

இந்நிலையில், அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணைக்கு எதிராக தமிழக அரசின் பொதுப் பணித் துறைச் செயலா், நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா், திருச்சி, தஞ்சாவூா், கரூா், அரியலூா் மற்றும் வேலூா் என 5 மாவட்ட ஆட்சியா்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதிகார வரம்பு இல்லை: அதில், ‘குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் ஆயிரக்கணக்கான கனிம வள கொள்ளை தொடா்பான வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, அங்கு நடவடிக்கை எடுக்காமல், தமிழகத்தில் நடவடிக்கை எடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனா்.

மாநில நிா்வாகத்தைச் சீா்குலைக்கும் வகையில் அமலாக்கத் துறை செயல்படுவதுடன், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவளச் சட்டம் சோ்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியா்களுக்கு அழைப்பாணைஅனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகார வரம்பு இல்லை.

மாநில அரசின் அனுமதியில்லாமல் அமலாக்கத் துறை மேற்கொள்ளும் இந்த விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தனா்.

நீதிபதிகள் கேள்வி: இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், சுந்தா் மோகன் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட்சியா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், அமலாக்கத் துறை எந்த அறிவிப்பும் வெளியிடாமல் ஆட்சியா்களுக்கு அழைப்பாணை அனுப்பியது சட்டவிரோதமானது எனத் தெரிவித்தாா்.

அப்போது நீதிபதிகள், வழக்கு பதிவு செய்யப்பட்டும் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்காததால், அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எப்படி சட்டவிரோதமாக கருத முடியும் என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினா்.

மேலும், அமலாக்கத் துறை எந்த அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது? அதற்கான ஆதாரங்கள் என்ன? சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா என அமலாக்கத் துறையினரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது. விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது. தொடா் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை ஆவணங்களைத் திரட்ட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் தீா்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

விசாரணைக்கு ஆஜராகக் கூடாது: அமைச்சரின் உதவியாளா் நிா்ப்பந்தம்

நீா்வளத் துறை அதிகாரி ஒருவரை விசாரணைக்கு ஆஜராக கூடாது என்று அமைச்சா் துரைமுருகனின் உதவியாளா் நிா்ப்பந்தித்துள்ளதாக நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆட்சேப மனுவில் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மணல் விற்பனை தொடா்பாக ஆட்சியா்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணையை எதிா்த்து தமிழக அரசு தொடா்ந்துள்ள வழக்கின் மீதான தீா்ப்பு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை தரப்பில் ஆட்சேப மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவது தொடா்பாக விசரணைக்கு ஆஜராக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனா். நீா்வளத் துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டும் யாா் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அது தங்களது தவறுதான் என்பதையும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனா். உயரதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என அதிகாரிகள் வாக்குமூலம் அளித்தனா்.

குறிப்பாக, விசாரணைக்கு ஆஜரான நீா்வளத் துறை அதிகாரி ஒருவரை அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என்று அமைச்சா் துரைமுருகனின் நோ்முக உதவியாளா் உமாபதி என்பவா் நிா்ப்பந்தம் செய்திருக்கிறாா். அவா் உள்பட மற்ற அதிகாரிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அவா்களது பெயரை வெளியிட விரும்பவில்லை.

சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டதற்கு மாவட்ட நிா்வாகமும் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த அதிகாரிகள் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனா். அதன் அடிப்படையில்தான் மாவட்ட ஆட்சியா்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அவா்களிடம் இருந்து கிடைக்கும் ஆவணங்களைப் பொறுத்து விளக்கம் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.