கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் ஒசூர் கோகுல் நகர் பகுயில் ரூ.3.5 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்து நிலம் விற்பனை செய்த சம்பவத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உதவி வருவாய் அலுவலர் உள்பட 7 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான ஒசூர் கோகுல் நகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பகுதி 16-இல் நிலம் வாங்கி விற்பனை செய்து வந்தது. குலுக்கல் முறையில் விற்பனை நடைபெற்ற இந்த நிலத்தை போலியாக சில நபர்கள் ஆவணங்கள் தயாரித்து பத்திரம் செய்தது தொடர்பாக வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கருக்கு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு பின் பாஸ்கர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் மாவட்ட கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் டாகூர் அறிவுரைப்படி மாவட்ட குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜா ரவி தங்கம் தலைமையில் ஆய்வாளர் சாவித்திரி உள்பட தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக, விசாரணையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலர் ஆராவமுதுவை கைது செய்தனர். பின் தொடர் விசாரணையில் முக்கிய குற்றவாளியான மதி என்கிற மதியழகனை கைது செய்தனர், இவருடன் இந்த மோசடி சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஒசூரைச் சேர்ந்த சதீஷ், டேனில், ஸ்ரீதர், முருகதாஸ், ஆனந்த் ஆகியோரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 13 செல்போன்கள், 62 ஏடிஎம் அட்டைகள், இரண்டு கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஈரோடு பகுதியில் ஈமு கோழி விற்பனையில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் மதியழகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.