திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூருவிலிருந்து திருவண்ணாமலைக்கு திங்கள்கிழமை இரவு வந்த அரசுப் பேருந்து, செங்கம் அருகே புதுப்பேட்டை கூட்டுச் சாலையில் எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க.. நினைவிழந்து வென்டிலேட்டரில் இருந்த கர்ப்பிணிக்கு பிரசவம்
கருமாங்குளம் என்ற இடத்தில் அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் செங்கம் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பேர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இருவரின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.