முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பா. வேல்துரை மறைவு
சேரன்மகாதேவி பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பா. வேல்துரை (73) செவ்வாய்க்கிழமை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
சேரன்மகாதேவி: சேரன்மகாதேவி பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பா. வேல்துரை (73) செவ்வாய்க்கிழமை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஒன்றியம், திருவிதத்தான்புள்ளி ஊராட்சி கங்கனாங்குளம் கிராமத்தில் 17.09.1950இல் பா. வேல்துரை பிறந்தார். இவரது தந்தை பாபநாசபெருமாள் திருவிதத்தான்புள்ளி ஊராட்சியில் 4 முறை தலைவராக இருந்துள்ளார்.
இதையும் படிக்க.. நினைவிழந்து வென்டிலேட்டரில் இருந்த கர்ப்பிணிக்கு பிரசவம்
பிஎஸ்சி பட்டதாரியான வேல்துரை, 1980இல் காங்கிரஸ் கட்சியின் சேரன்மகாதேவி வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார். அதன் பின்னர், 1989இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டபோது சேரன்மகாதேவி பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பின்னர், 1996-இல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். 2006இல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு சேரன்மகாதேவி தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011-இல் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட வேல்துரை தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்பு வகித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த வேல்துரை, செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு முத்துக்கனி என்ற மனைவி, சௌந்தர்யா, ஷீலா, அனிதா ஆகிய 3 மகள்களும், வி.பி. துரை என்ற மகனும் உள்ளனர்.
அவரது இறுதிசடங்கு சொந்த ஊரான கங்கனாங்குளத்தில் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. தொடர்புக்கு 94431 71111.