முகப்பு
தமிழ்நாடு

3 மாதங்களில் ஆட்டோ கட்டணம் உயரும்?

இன்னும் மூன்று மாதங்களில், சென்னை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களிலும் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவிருக்கிறது.

Updated On : 20 செப்டம்பர், 2023 at 1:11 PM
ஆட்டோ கட்டணம்
பகிர்:


சென்னை: இன்னும் மூன்று மாதங்களில், சென்னை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களிலும் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவிருக்கிறது.

இந்த தகவல், தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது அளித்த பதிலில் தெரிய வந்துள்ளது.

தமிழக அரசின், கட்டண மறுசீரமைப்பு ஆணையம் அளிக்கும் பரிந்துரையின்படி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த ஆண்டு, எரிபொருள் விலை மற்றும் போக்குவரத்து செலவுகளை கருத்தில் கொண்டு, இந்த ஆணையமானது, முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.40ஐ கட்டணமாகவும், அதன்பிறகு, ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 என்பதையும் நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று பரிந்துரைத்திருந்தது. தற்போது, அடிப்படைக் கட்டணமாக அதாவது 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25 நிர்ணயிக்கப்பட்டு, அதன்பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ஐ கட்டணமாக வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த வேளையில், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்கள், தமிழக அரசின் இந்த பரிந்துரையை நிராகரித்ததோடு, ஓலா, ரேப்பிடோ போன்று தமிழக அரசே ஒரு செயலியை அறிமுகம் செய்து, அதில் ஆட்டோ கட்டணம் மட்டுமில்லாமல், காத்திருக்கும் நேரம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.