பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் முன் விரோதம் காரணமாக சனிக்கிழமை பூ வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை நகரில் உள்ள சுண்ணாம்புகாரத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வடமலை மகன் காத்தாடி ராஜா என்கிற ராஜா (52). இவர் பட்டுக்கோட்டை பெரிய தெரு பகுதியில் உள்ள தனியார் வங்கி அருகில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி, வீரமணி உள்ளிட்டவர்களுக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை பூ வியாபாரம் செய்வதற்காக தலைமை அஞ்சலகம் பகுதிக்கு காத்தாடி ராஜா வந்துள்ளார். அப்போது அங்கு வந்த கார்த்திக் மற்றும் வீரமணி இருவரும் சேர்ந்து காத்தாடி ராஜாவை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயங்களுடன் காத்தாடி ராஜா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த நகர போலீசார், படுகாயம் அடைந்த காத்தாடி ராஜாவை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.