ஓமந்தூரார் மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலைக் குறித்து விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலைக் குறித்து விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 17 மணிநேரத்துக்கும் மேலாக அவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது அறையில் இருந்து 3 பைகளில் இருந்து ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றனர்.
17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெஞ்சு வலிப்பதாக கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட இசிஜி நிலையாக இல்லை என்றும், சுயநினைவின்றி காணப்படுவதாகவும் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்று செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகிறார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் முதல்வருடன் உள்ளனர்.