சிக்னலை மீறி புளியமங்கலத்தில் நிற்காமல் சென்ற ரயில்! ஓட்டுநர் கவனக்குறைவு
புளியமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சிக்னலை மீறி சென்ற புறநகர் மின்சார ரயில் ஓட்டுநரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம்: புளியமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சிக்னலை மீறி சென்ற புறநகர் மின்சார ரயில் ஓட்டுநரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் வழியாக திருத்தணிக்கு நாள்தோறும் மாலை 5.35 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. வழக்கமாக புளியமங்கலம் ரயில் நிலையத்தில் இரவு 8.15 மணிக்கு இந்த ரயில் நின்று செல்லும்.
ஆனால், நேற்று புளியமங்கலத்தில் நிற்காமல் அரக்கோணம் ரயில் நிலையத்தில் தான் ரயில் நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், என்ஜின் பகுதிக்கு சென்று ரயில் ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சிவப்பு சிக்னல் இருக்கும்போது எவ்வாறு ரயிலை இயக்குநீர்கள்? ரயிலின் கார்டும் சிக்னலை கவனிக்கவில்லையா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
இதையும் படிக்க | நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் அனுமதி!
இந்நிலையில், ஞாபக மறதியில் சிக்னலை பார்க்காமல் விரைவு மின்சார ரயில் என நினைத்து ரயிலை இயக்கியதாக கூறிய ஓட்டுநர் ஜோஸ்வா, பயணிகளிடம் மன்னிப்பு கோரினார்.
தொடர்ந்து, 20 நிமிடங்கள் தாமதமாக அரக்கோணத்தில் இருந்து ரயில் புறப்பட்டுச் சென்றது.
இந்த சம்பவம் குறித்து ஓட்டுநர் ஜோஸ்வா மற்றும் கார்டு தியாகராஜனிடம் அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.