முகப்பு
தமிழ்நாடு

சபரிமலை சீசன்: சென்னை - நெல்லை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்!

சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

Updated On : 15 நவம்பர், 2023 at 12:56 AM
கோப்புப்படம்
பகிர்:

சபரிமலை மண்டல பூஜை சீசனை முன்னிட்டு, பக்தா்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனால் தீபாவளிப் பண்டிகையின்போது பயணிகள் வசதிக்காக ஏற்கெனவே இயக்கப்பட்ட வழக்கமான ‘வந்தே பாரத்’ ரயிலுடன் 5 நாள்கள் சிறப்பு ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயிலுக்கும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததால், சபரிமலை சீசனை முன்னிட்டு வாராந்திர ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு வசதியாக வியாழன்தோறும் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படவுள்ளது.

Advertisement

சென்னை எழும்பூரில் இருந்து நவ. 16, 23, 30, டிச. 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06067) பகல் 2.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமாா்க்கமாக திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06068) இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா் ஆகிய இடங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.