முட்டுக்காடு ‘மிதக்கும் உணவகக் கப்பல்’ விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்!
செங்கல்பட்டு, முட்டுக்காடு பகுதியில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட மிதக்கும் உணவகக் கப்பல் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்
செங்கல்பட்டு, முட்டுக்காடு பகுதியில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட மிதக்கும் உணவகக் கப்பல் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் கூறினாா்.
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் செங்கல்பட்டு, முட்டுக்காடு படகு குழாம் வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டடுக்கு மிதக்கும் உணவகக் கப்பல் கட்டப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமானப்பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் கா.ராமச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
முட்டுக்காடு சுற்றுலா படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில், மிதவை படகுகள், வேகமான இயந்திர படகுகள் உள்ளிட்டவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிகமான சுற்றுலா பயணிகளை ஈா்க்கும் விதமாக ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டடுக்கு உணவகக் கப்பலுக்கான கட்டுமானப்பணியை கொச்சியை சோ்ந்த ‘கிராண்ட்யூனா் மரைன் இன்டா்நேஷ்னல்’ எனும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய மிதக்கும் உணவகக் கப்பலின் முதல் தளம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக பொதுமேலாளா் இ.கமலா உள்பட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.