உலக அதிசயங்கள் பட்டியலில் தஞ்சை கோயிலை சேர்க்கப் பரிந்துரை!
உலக அதிசயங்கள் பட்டியலில் தஞ்சாவூர் பெரியகோயிலை சேர்க்கப் பரிந்துரை செய்யப்படும் என்றார் நாகலாந்து ஆளுநர் இல. கணேசன்.
தஞ்சாவூர்: உலக அதிசயங்கள் பட்டியலில் தஞ்சாவூர் பெரியகோயிலை சேர்க்கப் பரிந்துரை செய்யப்படும் என்றார் நாகலாந்து ஆளுநர் இல. கணேசன்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த இல.கணேசன் பெரியகோயிலில் வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
நான் தஞ்சாவூர் நகரத்தைச் சேர்ந்தவன். இளம் வயதில் இருந்தே நான் பெரிய கோயிலுக்கு பல முறை சென்று தரிசனம் செய்துள்ளேன். பெரிய கோயிலின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நான் ஆன்மீகத்தையும், தேசியத்தையும் நம்பக்கூடியவன்.
Advertisement
Advertisement
தஞ்சாவூர் பெரியகோயிலை உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது குறித்து அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்து வருகிறது எனக் கேட்டுப் பார்க்கிறேன்.
இது தொடர்பாக எனது தரப்பில் இருந்து கருத்துக்கள் கேட்டால் அதற்கும் பதில் கூறுவேன். உலக அதிசய பட்டியலில் தஞ்சாவூர் பெரியகோயிலை சேர்க்க நானும் பரிந்துரை செய்வேன் என்றார் இல. கணேசன்.
முன்னதாக, ஆளுநர் இல. கணேசனுக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.