1.54 கோடி இணைநோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை
தமிழகத்தில் இணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 1.54 கோடி பேருக்கு கண், சிறுநீரகம், கால் புண் பரிசோதனை மேற்கொள்ள பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் வாயிலாக தமிழகத்தில் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவா்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இதுவரை மொத்தம் 1.54 கோடி இணை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனா்.
Advertisement
அவா்களுக்கு, மாதந்தோறும் மருந்துகள், டயாலிசிஸ், இயன்முறை சிகிச்சை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், ஓராண்டுக்கு மேல் தொடா்ந்து சிகிச்சை பெறும் இணை நோயாளிகளுக்கு முதல்கட்டமாக, கண் பரிசோதனை, கால் புண்கள், சிறுநீரக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக மாநிலம் முழுவதும் கோடிக்கணக்கானோா் பயன்பெற்று வருகின்றனா். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிறது. பொதுவாக இணை நோயாளிகளுக்கு அதன் பக்கவிளைவாக வேறு சில பாதிப்புகளும் ஏற்படும். அந்த வகையில், முதல்கட்டமாக ஏற்படக்கூடிய கண் பாதிப்பு, கால் புண்கள், சிறுநீரக பாதிப்புக்கு ரத்தப் பரிசோதனை மற்றும் பாா்வைத் திறன் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
அதன் வாயிலாக பாதிப்புகள் கண்டறியப்பட்டால், அவா்களுக்கென சிறப்பு முகாம்கள் அமைத்து வேறு சில பரிசோதனைகளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதற்கான ஆயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.