திருப்பூர்: அரசுப் பேருந்து மீது கார் மோதி 5 பேர் பலி
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே இன்று(ஏப். 9) அதிகாலை நடந்த சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் நல்லிக்கவுண்டன் நகர், புது நகர், 7 ஆவது தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது குடும்பத்தினர் 6 பேர் அவர்களது காரில் திருக்கடையூர் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். காரை அவரது இளைய மகன் இளவரசன்(26) ஓட்டி வந்துள்ளார். அப்போது வெள்ளக்கோவில் - காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே எதிரில், திருப்பூரிலிருந்து திருச்சி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது.
இதில் காரில் இருந்த சந்திரசேகரன் (60), இவருடைய மனைவி சித்ரா (57), இவர்களுடைய இளைய மகன் இளவரசன் (26), மூத்த மகன் சசிதரனின் மனைவி அருவிவித்ரா (30), சசிதரனின் மூன்று மாத பெண் குழந்தை சாஷி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Advertisement
Advertisement
சசிதரன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர், கரூர் மாவட்டம் மாணிக்காபுரத்தைச் சேர்ந்த சாமிநாதன் (51) மீது வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் நொய்யல் பழனிசாமி (53) என்பவர் அரசுப் பேருந்தின் நடத்துநராவார்.
சம்பவ இடத்தை காங்கயம் டிஎஸ்பி பார்த்திபன், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ். ஞானப்பிரகாசம் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.