சென்னை - நெல்லை விரைவு ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நெல்லை விரைவு ரயிலில் ஆவணங்களின்றி வைத்திருந்த பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித் துறையினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த வாரம் 6ம் தேதி இரவு தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில், பயணித்த மூவர், 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது தெரியவந்தது.
விசாரணையில் பிடிபட்டவர்கள், புரசைவாக்கம் தனியார் விடுதியில் பணியாற்றும் பா.ஜ.க உறுப்பினர் சதீஷ், சகோதரர் நவீன், ஓட்டுநர் பெருமாள் என்பது தெரியவந்தது. இதில் சதீஷ் அளித்த தகவலின்படி நயினார் நாகேந்திரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.
இதனால், நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.