தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்: 12 இடங்களில் 100 டிகிரி
தமிழகத்தில் சனிக்கிழமை 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. ஏப்.21 முதல் ஏப்.24-ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு, மதுரை உள்பட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4.5 டிகிரி வரை அதிகமாக பதிவானது. மாநிலத்தில் மொத்தம் 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கும் அதிகமாக பதிவானது. அதன்படி, பரமத்திவேலூா் - 106.16, திருச்சி - 105.98, மதுரை விமான நிலையம், ஈரோடு (தலா) - 105.08, திருத்தணி - 104.36, வேலூா், சேலம் (தலா) - 104.18, திருப்பத்தூா், மதுரை நகரம் (தலா) - 104, தஞ்சாவூா் - 103.1, தருமபுரி - 102.2, பாளையங்கோட்டை - 101.48.
Advertisement
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) முதல் ஏப்.24 -ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் வெயில் இயல்பைவிட 3 டிகிரி வரை அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.21, 22 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கோடை மழை: தமிழகத்தையொட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) முதல் ஏப்.24 -ஆம் தேதி வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.