முகப்பு
தமிழ்நாடு

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

வேலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்

Updated On : 25 ஏப்ரல், 2024 at 5:33 AM
பகிர்:

சட்டவிரோத குவாரி மணல் விற்பனை தொடர்புடைய பணமோசடி விசாரணை விவகாரத்தில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் வியாழக்கிழமை நேரில் ஆஜராகினர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக கூறப்படும் பணமோசடி வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து மாநில அரசும், ஆட்சியர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சம்மனுக்கு கடந்தாண்டு நவம்பரில் தடை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத்துறை அழைப்பாணக்கு மதிப்பளித்து மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, அமலாக்கத் துறை தரப்பில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. எனினும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனைத் தொடர்ந்து, ஏப்.2-ஆம் தேதி மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ”நாங்கள் உத்தரவிட்டிருந்தபோதிலும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தது சரியல்ல. அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்கவில்லை என்று தோன்றுகிறது. மேலும், அவர்களின் செயலானது நீதிமன்றம், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் மீது எந்த மரியாதையும் இல்லை என்பதைக் காட்டுகிறது.” என்று அதிருப்தி தெரிவித்து ஏப்ரல் 25-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.