கோவையில் தமிழ்ப் புதல்வன் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை குறிப்பிட்டுப் பேசினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கல்லூரி மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவை அரசுக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று(ஆக. 9) தொடக்கிவைத்தார்.
தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலமாக, அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வியில் சேரும் 3.28 லட்சம் மாணவா்கள் பயன் பெற உள்ளனர். அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களின் உயா் கல்விச் சோ்க்கையை அதிகரிக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, 6 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வியில் சேரும் மாணவா்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், இதழ்களை வாங்கி உயா் கல்வியை மெருகேற்ற உதவும் வகையில் ரூ.1,000 அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட உள்ளது.
ஏற்கெனவே மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாணவர்களுக்கு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
திட்டத்தை தொடக்கிவைத்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், வினேஷ் போகத் குறித்துப் பேசினார்.
'ஒலிம்பிக்கில் பங்கேற்ற சகோதரி வினேஷ் போகத் எப்படிப்பட்ட தடைகளை எல்லாம் எதிர்கொண்டார் என்று உங்கள் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் பலவீனமாக வீட்டுக்குள் முடங்கிவிடாமல், தைரியமும் தன்னம்பிக்கையும் அசாத்திய துணிச்சலும் உள்ள பெண்ணாக போராடி இன்று நாம் எல்லாரும் பாராட்டும் அளவுக்கு கொடிகட்டி பறந்துகொண்டிருக்கிறார்.
தடைகள் என்பது உடைத்தெறியத்தான். தடைகளைப் பார்த்து ஒருபோதும் முடங்கிவிடக்கூடாது, சோர்ந்து விடக்கூடாது. வெற்றி ஒன்றே உங்கள் இலக்காக இருக்க வேண்டும். அதைக் குறிவையுங்கள். வெற்றி ஒருநாள் உங்கள் வசப்படும்' என மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.