சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாகா்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) தொடங்குகிறது.
தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலியில் இருந்து ஆக.13, 18 தேதிகளில் இரவு 10.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06020/19), மறுநாள் காலை 11 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து ஆக.14, 19 ஆகிய தேதிகளில் மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூா் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா் வழியாக இயக்கப்படும்.
நாகா்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு ஆக.18, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06012/11) மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து ஆக.19, 24 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.
இந்த ரயில் வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.
மேலும், மங்களூா்-கொச்சுவேலி இடையே ஆக.17-ஆம் தேதியும், மறுமாா்க்கமாக ஆக.18-ஆம் தேதியும் சிறப்பு ரயில் (எண் 06041/42) இயக்கப்படும்.
இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.