பாஜக பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!
சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் பாஜகவின் இருசக்கர வாகனப் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பாஜகவின் இருசக்கர வாகனப் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் வருகிற ஆக. 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாவட்டத் தலைநகரங்களில் தேசியக்கொடி ஏந்தி இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்படும் என தமிழக பாஜக அறிவித்திருந்தது.
ஆனால், பைக் பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக முறையீடு செய்தது. மேலும், பாஜகவின் முறையீட்டை ஏற்று, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
இந்த வழக்கு நேற்று(ஆக. 13) பிற்பகல் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், காவல்துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதையடுத்து இன்றைய வழக்கின் விசாரணையில், சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் பாஜகவின் இருசக்கர வாகனப் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.