கருணாநிதி நினைவு நாணயம் வெளியீடு!
கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிட, மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஆக. 18) வெளியிட்டார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரும் பங்கேற்றனர்.
கலைவாணர் அரங்கிற்கு வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்தும் அமைச்சர் துரைமுருகன் துண்டு அணிவித்தும் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பொன்னாடைப் போர்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் கெளரவித்தார். நிகழ்ச்சியில் கருணாநிதி குறித்தும் அவர் கொண்டுவந்த திட்டங்கள் குறித்தும் சிறப்புக் காணொளி திரையிடப்பட்டது.
பின்னர் கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிட, மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.