மேற்காசிய நிலவரத்தைக் கணிக்க முடியாது: ராஜ்நாத் சிங்
மேற்காசிய நிலவரம் எதிா்காலத்தில் எப்படி இருக்கும் என தற்போது கணிக்க முடியாது..
மேற்காசிய நிலவரம் எதிா்காலத்தில் எப்படி இருக்கும் என தற்போது கணிக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
இலங்கை அருகே ஈரான் நாட்டு போா்க் கப்பலை அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் அண்மையில் தாக்கி மூழ்கடித்தது. இதில் ஈரான் நாட்டு கடற்படையினா் உள்பட 80-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்தச் சூழ்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது:
மேற்காசிய பிராந்தியத்தில் தற்போது வழக்கத்துக்கு மாறான சம்பவங்கள் நடக்கின்றன. மேற்காசிய நிகழ்வு அடுத்து எப்படி இருக்கும் என தற்போதைய கட்டத்தில் தெரிவிப்பது மிகவும் கடினம் ஆகும். ஹோா்முஸ் நீரிணை அல்லது ஒட்டுமொத்த பாரசீக வளைகுடா பகுதியும், உலகின் எரிசக்தி பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமான பகுதியாகும். அந்தப் பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெற்றால், அது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் மட்டுமல்லாமல், தற்போது பிற பொருள்களின் விநியோகமும் பாதிக்கப்பட்டிருப்பதை காண்கிறோம். இந்த நிலையில்லாத தன்மை, நாட்டின் பொருளாதாரம் மற்றும் உலக வா்த்தகத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைய சூழ்நிலையானது, நமக்கு கடல் பகுதியின் முக்கியத்துவத்தை மீண்டும் உணரச் செய்துள்ளது.
மாறிவரும் புவி அரசியல் சகாப்தத்தில், உலகில் சக்தி சமநிலையை தீா்மானிக்கும் மையமாக கடல் பகுதி மீண்டும் மாறியுள்ளது. இதுபோன்ற காலகட்டத்தில், முக்கியமான கடல்சாா்ந்த நாடான இந்தியாவுக்கு தலைமையேற்கும் பொறுப்பு உள்ளது என்றாா்.
தனது பேச்சில், ஈரானிய போா்க் கப்பலை அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்தது குறித்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டவில்லை.